செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு முழுவதும் நிறுத்தம்
- புழல் ஏரிக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்ததால் கடந்த 19-ந் தேதி முதலே உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
- சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 823 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூந்தமல்லி:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் 'மாண்டஸ்' புயலால் பெய்த தொடர்மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததை தொடர்ந்து ஏரியில் இருந்து 3 ஆயிரம கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மழை முழுவதும் ஓய்ந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது.
இதையடுத்து ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 246 கனஅடி மட்டும் தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 130 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புழல் ஏரிக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்ததால் கடந்த 19-ந் தேதி முதலே உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 187 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2803 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 21 அடியில் 18.95 அடிக்கு தண்ணீர் உள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 2896 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1280 கனஅடி தண்ணீர் வருகிறது. 1053 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 823 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 15 கனஅடி தண்ணீர் வருகிறது.
கண்ணன்பேட்டை தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மி.கனஅடியில் 496 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.