தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
- தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று முதல் 26-ந் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. 5 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு குறித்து இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று முதல் 26-ந் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அப்போது 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று 35 முதல் முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.