காவிரியில் உரிய நீர் திறக்காததால் தஞ்சை மாவட்டத்தில் 33 சதவீதம் அளவுக்கு குறுவை மகசூல் இழப்பு
- தஞ்சை மாவட்டத்தில் வேளாண் துறை, புள்ளியல் துறை அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தனர்
- ஏக்கருக்கு 45 மூட்டை கிடைத்த நிலையில் தற்போது 30 முதல் 36 மூட்டை தான் கிடைக்கிறது.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கான கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் 100 அடியை தாண்டி இருந்த தண்ணீர் நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக குறைந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது . இதனால் டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகிவிட்டது. எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 78486 ஹெக்டேர் அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டன. இவற்றில் 49000 ஹெக்டேர் பரப்பளவில் அறுவடை பணிகள் முடிந்து விட்டது. ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததாலும் போதிய மழைப்பொழிவு இல்லாததாலும் பிரபாகரன் குறுவைப் பயிர்கள் கருகி வீணாகி விட்டது. இந்த ஆண்டு 33 சதவீதம் அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் வேளாண் துறை, புள்ளியல் துறை அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தனர். அதில் அறுவடை செய்யும்போது ஹெக்டேருக்கு சராசரியாக 6000 கிலோ நெல் கிடைத்த இடத்தில் தற்போது சராசரியாக 4232 கிலோ நெல் தான் கிடைத்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் கூறும்போது:-
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை குறுவையில் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் பெருமளவில் குறுவைப் பயிர்கள் வீணாகிவிட்டது. அடுத்து சம்பா சாகுபடி தொடங்கலாமா என்பதே தெரியாத நிலையில் உள்ளோம். ஏக்கருக்கு 45 மூட்டை கிடைத்த நிலையில் தற்போது 30 முதல் 36 மூட்டை தான் கிடைக்கிறது. இதற்கு முன் இந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது கிடையாது. இலக்கிய மிஞ்சி குறுவை சாகுபடி செய்தும் தற்போது அது பயன் இல்லாமல் போய்விட்டது என்றனர்.