தமிழ்நாடு
உடுமலை அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
- கார் சின்னவீரம்பட்டி அருகே தனியார் பள்ளி முன்பு சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது.
- தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் ராமு. இவர் தனது காரில் உடுமலை- திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். கார் சின்னவீரம்பட்டி அருகே தனியார் பள்ளி முன்பு சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் சுதாரித்து கொண்ட ராமு உடனடியாக காரை நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கினார். அதற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
உடனே இதுகுறித்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி கோபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.