தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,607 கன அடியாக அதிகரிப்பு- ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது

Published On 2023-07-25 06:00 GMT   |   Update On 2023-07-25 06:00 GMT
  • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
  • நேற்று காலை 78.54 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.56 அடியாக உயர்ந்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 78.54 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.56 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு நேற்று வினாடிக்கு 5,637 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 7,607 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டி உள்ளதால் பவானிசாகர் அணை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது.

Tags:    

Similar News