தமிழ்நாடு
கடல்போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,791 கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-11-06 05:17 GMT   |   Update On 2022-11-06 05:17 GMT
  • பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
  • நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது.

அதன்படி நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. நேற்று வினாடிக்கு 2,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 4,791 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக மட்டும் 300 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன.

தற்போது பவானிசாகர் அணை 104 அடியை நெருங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News