தமிழ்நாடு செய்திகள்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து வெளியூருக்கு நாளை 1000 சிறப்பு பஸ்கள்

Published On 2023-10-19 13:47 IST   |   Update On 2023-10-19 13:47:00 IST
  • அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
  • இன்று காலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னை:

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களுடன் சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்களும் சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகரித்து உள்ளது.

சென்னை மற்றும் சுற்று பகுதியில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தொழிலாளர்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர்.

ரெயில்களில் இடம் இல்லாததால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு, மதுரவாயல் பைபாஸ், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் 2264 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி நாளை மட்டும் 1000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக இந்த பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. அரசு விரைவு பஸ்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டதால் பிற போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 17 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்ய உள்ளனர்.

அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்ற நிலையில் தனியார் ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு அதிகரித்து உள்ளது. இந்த பண்டிகை விடுமுறையையொட்டி ஆம்னி பஸ்களில் 32 சதவீதம் முன்பதிவு அதிகரித்து உள்ளதாக ரெட் பஸ் ஆன்லைன் புக்கிங் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஊட்டி, கொடைக்கானல், உடுமலைப்பேட்டை போன்ற சுற்றுலா தலங்களுக்கு அதிகளவில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் திருச்செந்தூர் வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, பழனி போன்ற ஆன்மீக தலங்களுக்கும் ஏராளமான பேர் செல்கின்றனர். ஆயுத பூஜை விடுமுறையில் சுமார் 1.5 லட்சம் பேர் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்தும் பிற நகரங்களுக்கு பயணம் அதிகரித்து உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறும்போது, கோயம்பேட்டில் இருந்து நாளை பல்வேறு நகரங்களுக்கு 1270 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதில் 70 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன. 21-ந் தேதி (சனிக்கிழமை)யும் அதிக முன்பதிவு உள்ளது. 50 ஆயிரம் பேர் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர் என்றார்.

இது தவிர சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்களில் இருந்து வட மாநிலங்களுக்கும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரெயில்களிலும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

Tags:    

Similar News