தமிழ்நாடு செய்திகள்

நகை திருடிய வழக்கில் 7 பேரை கைது செய்த ஆந்திரா போலீசார்- மத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

Published On 2023-06-16 12:15 IST   |   Update On 2023-06-16 12:15:00 IST
  • ஐயப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவிற்கு சென்றுள்ளார்.
  • சித்தூர் போலீசார் கடந்த 13-ந் தேதி ஐயப்பனை ஆந்திராவில் கைது செய்தனர்.

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் புளியாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது40). இவரது மனைவி அருணா (30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

பிரபல நகை திருடனான ஐயப்பன் தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தனது கைவரிசை காட்டியுள்ளார். இதனால் அந்தந்த மாநிலங்களில் ஐயப்பன் மீது பல்வேறு நகை திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் ஐயப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவிற்கு சென்றுள்ளார். அப்போது ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஒரு நகைகடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருடு போயுள்ளது. இதுகுறித்து சித்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், ஐயப்பன் தான் இந்த நகைகளை திருடியது தெரியவந்தது.

இதுதொடர்பாக சித்தூர் போலீசார் கடந்த 13-ந் தேதி ஐயப்பனை ஆந்திராவில் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 700 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள 300 கிராம் தங்க நகைகள் எங்கே பதுக்கி வைத்துள்ளார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மீதமுள்ள நகைகளை தனது சொந்த கிராமத்தில் பதுக்கி வைத்துள்ளாரா? என கருதி ஆந்திர மாநில போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே புளியாண்டபட்டியில் உள்ள ஐயப்பன் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆந்திரா போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், ஐயப்பன் வீட்டில் சோதனை செய்ததில் நகைகள் ஏதும் கிடைக்காததால், இந்த நகை திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதாக ஐயப்பனின் மனைவி அருணா, 7 வயது மகன் மற்றும் உறவினர்களான 2 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதுகுறித்து ஐயப்பனின் மற்ற உறவினர்கள் உடனே மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, ஆந்திரா போலீசார் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட 7 பேரையும் உடனடியாக மீட்டு தரவேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு போலீசார் திருட்டு வழக்கில் தான் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஆந்திரா போலீசாரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் 7 பேரையும் ஆந்திரா போலீசார் கைது செய்து அழைத்து சென்று 3 நாட்களாகியும் எந்தவித தகவலும் கிடைக்காததால் ஆத்திரத்தில் உறவினர்கள் நேற்று நள்ளிரவில் மீண்டும் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஐயப்பனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆந்திரா போலீசாரால் கைதான 7 பேரின் உறவினர்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News