சத்தியமங்கலம் அருகே தீ விபத்தில் முதியவர் உடல் கருகி பலி- பீடி பற்ற வைத்த போது விபரீதம்
- வீராசாமி படுத்திருந்த மெத்தை முழுவதும் தீப்பிடித்து எரிந்து வீராசாமி உடல் கருகி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கோட்டு வீரம்பாளையம், கைக்கோளார் தெருவை சேர்ந்தவர் வீராசாமி (82). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். வசந்தா கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். 3 மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர்.
வீராசாமி கைக்கோளர் தெருவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். தந்தைக்கு 2-வது மகள் 3 வேளையும் சாப்பாடு கொடுத்து பார்த்து வந்தார். மற்ற 2 மகள்கள் அவ்வபோது தந்தையை பார்த்து செலவுக்கு பணம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீராசாமியின் 2-வது மகள் வழக்கம் போல் சாப்பாடு கொடுக்க வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது வீராசாமி படுத்திருந்த மெத்தை முழுவதும் தீப்பிடித்து எரிந்து வீராசாமி உடல் கருகி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சத்திய மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீராசாமி பீடியை பற்ற வைத்து விட்டு தீக்குச்சியை மெத்தையில் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.