தமிழ்நாடு செய்திகள்

சத்தியமங்கலம் அருகே தோட்ட காவலில் இருந்த விவசாயியை யானை மிதித்து கொன்றது

Published On 2023-09-22 10:08 IST   |   Update On 2023-09-22 10:08:00 IST
  • யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி தப்பியோட முயன்றார்.
  • விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சத்தியமங்கலம், செப்.22-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புது வடவள்ளி அட்டமொக்கை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (63). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

ராமசாமி அதேப் பகுதியில் சொந்தமாக ஒன்றை ஏக்கர் நிலம் வைத்து பயிரிட்டுள்ளார். வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் அடிக்கடி யானை தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ராமசாமி நேற்று இரவு வழக்கம் போல் தனது விவசாய தோட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார். தோட்டத்தில் அவர் நாய் வளர்த்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ராமசாமி தோட்டத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நாய் கூரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தார்.

அப்போது ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ராமசாமி தோட்டத்திற்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது. யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை தூக்கி வீசி அவரது காலில் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

யானை தாக்கி உயிரிழந்த ராமசாமி குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. தொடர்ந்து மீதி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News