தமிழ்நாடு

திருச்செந்தூரில் குழந்தை கடத்தலில் கைதான பெண் திடீர் உயிரிழப்பு

Published On 2023-10-09 13:41 GMT   |   Update On 2023-10-09 13:41 GMT
  • குழந்தையை கடத்திய திலகவதி என்ற பெண்ணையும் அவரது கணவர் பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.
  • குழந்தையை மீட்க அழைத்து சென்றபோது, திலகவதி மயக்கம் போட்டு கீழே விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துராஜ். இவரது மனைவி ரதி. இவர்களது 1½ வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஸ்.

முத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அப்போது அவர்களுடன் 40 வயது பெண் ஒருவர் அறிமுகமானார். பின்னர் அதனை பயன்படுத்தி அந்த பெண், கோவில் வளாகத்தில் வைத்து குழந்தையை கடத்தி சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரதி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண்ணுடன், ஒரு வாலிபரும் மோட்டார் சைக்கிளில் குழந்தையை திருடிச் சென்றது தெரியவந்தது.

பின்னர், குழந்தையை கடத்திய திலகவதி என்ற பெண்ணையும் அவரது கணவர் பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், குழந்தையை கடத்தப்பட்ட சம்பவத்தில் கைதான பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கோவையில் பாண்டியன்- திலகவதி தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், திலகவதி உயிரிழந்துள்ளார்.

குழந்தையை மீட்க அழைத்து சென்றபோது, திலகவதி மயக்கம் போட்டு கீழே விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர், திலகவதியை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News