தமிழ்நாடு

வீடுகளுக்கு சப்ளை செய்ய இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு- பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2023-09-03 06:51 GMT   |   Update On 2023-09-03 06:51 GMT
  • சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தூக்கி வீசப்பட்டது.
  • கியாஸ்சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

தாம்பரம்:

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கியாஸ் ஏஜென்சி உள்ளது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் கியாஸ் சிலிண்டர்கள் இரும்புலியூர், கங்கை தெருவில் அமைந்து உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள காலி மைதானத்தில் இறக்கிவைத்து சிறிய வாகனங்களில் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

வழக்கம்போல் வாகனங்களில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி, இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தூக்கி வீசப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் அருகில் 20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த மற்ற கியாஸ் சிலிண்டர்கள் எதுவும் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கியாஸ்சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கியாஸ் சிலிண்டரை தரையில் இறக்கி வைத்த போது வெயிலின் தாக்கத்தில் அது வெடித்ததாக ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

கியாஸ்சிலிண்டரை கொண்டு செல்லும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News