தமிழ்நாடு

மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 54 போலீசாருக்கு மர்ம காய்ச்சல்: 14 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2023-09-30 05:00 GMT   |   Update On 2023-09-30 05:00 GMT
  • காய்ச்சல் பாதிக்கப்பட்ட 40 பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.
  • 14 பேருக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு தீவிரமாக உள்ளது.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 492 ஆண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணிக்காக திருப்பூர், காங்கேயம் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பணிகள் முடிந்து மீண்டும் காவலர் பயிற்சி பள்ளிக்கு திரும்பிய நிலையில் 54 பயிற்சி போலீசாருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 14 பயிற்சி போலீசார் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 40 பயிற்சி போலீசார் காவலர் பயிற்சி பள்ளி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், காய்ச்சல் பாதிக்கப்பட்ட 40 பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். 14 பேருக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு தீவிரமாக உள்ளது. அவர்களுக்கு ரத்தம் மற்றும் டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன் முடிவுகள் வந்த பிறகு தான் டெங்கு காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சலா என்பது தெரிய வரும் என்றனர்.

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயிற்சி போலீசாரை மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்ததோடு மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து காவலர் பயிற்சி பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 40 போலீசாரையும் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பயிற்சி போலீசாருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News