தமிழ்நாடு செய்திகள்

100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழகத்துக்கு 3-வது இடம்

Published On 2024-08-28 07:34 IST   |   Update On 2024-08-28 07:34:00 IST
  • தமிழகத்தில் மட்டும் 89 லட்சத்து 3 ஆயிரத்து 310 பயனாளிகள் இருக்கிறார்கள்.
  • 89.27 சதவீதம் பெற்று கேரளா முதல் இடத்தில் உள்ளது.

சென்னை:

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 13.13 கோடி பயனாளிகள் உள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 89 லட்சத்து 3 ஆயிரத்து 310 பயனாளிகள் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பங்கேற்பை எளிதாக்க குழந்தைகள் காப்பகத்திற்கான ஏற்பாடு, இருப்பிடம் அருகிலேயே பணி என்பது உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தரவு தளம், கடந்த நிதி ஆண்டில் (2023-24) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு தொடர்பாக மாநிலங்கள் வாரியான விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், 89.27 சதவீதம் பெற்று கேரளா முதல் இடத்தில் உள்ளது.

87.39 சதவீதம் பெற்று புதுச்சேரி 2-ம் இடத்திலும், 86.66 சதவீதம் பெற்று தமிழகம் 3-ம் இடத்திலும் உள்ளது. மிகவும் குறைவாக ஜம்மு காஷ்மீர் 32.16 சதவீத பங்களிப்பு மட்டுமே கொடுத்திருக்கிறது. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே 70 சதவீதத்துக்கு அதிகமான பெண்களின் பங்கேற்பினை தந்திருக்கின்றன. 50 முதல் 70 சதவீத பங்களிப்பினை 16 மாநிலங்களும், 50 சதவீதத்துக்கு குறைவான பங்களிப்பினை 14 மாநிலங்களும் வழங்கியிருக்கின்றன.

Tags:    

Similar News