தமிழ்நாடு
ஈரோட்டில் ரயான் துணி உற்பத்தி செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைத்தறிகள்.

ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது

Published On 2022-07-03 04:08 GMT   |   Update On 2022-07-03 04:08 GMT
  • ரயான் துணிக்கு இணையாக காட்டன் துணியும் விலை குறைந்துள்ளதால் ரயான் துணி விற்பனை குறைந்துள்ளது.
  • உற்பத்தி நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை உற்பத்தியில் ஈரோட்டில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக நூலின் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விசைத்தறியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். மேலும் இந்த வருடத்திற்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சமீப காலமாக நூலின் விலைக்கு கூட உற்பத்தி செய்யப்பட்ட துணி விலை போகாததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

இதையடுத்து விசைத்தறி உரிமையாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் இன்று முதல் வரும் 10-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்தம் செய்வதென்று முடிவு செய்தனர்.

அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் ரயான் துணி உற்பத்தி நிறுத்தம் தொடங்கியது. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

கடந்த ஒரு மாதமாக ரயான் நூலின் விலை எவ்வித மாற்றம் இல்லாத போதிலும் 120 கிராம் எடை கொண்ட துணியின் விலை 15 நாட்களுக்கு முன்பு ரூ. 28 ஆக இருந்தது. இப்போது ரூ. 26-க்கு கூட மார்க்கெட்டில் விலைக்கு போகாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி விலையை விட மார்க்கெட்டில் ரயான் துணியின் விலையை குறைத்து கேட்கின்றனர்.

மேலும் வட மாநிலங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் விற்பனை சரிவடைந்துள்ளது. ரயான் துணிக்கு இணையாக காட்டன் துணியும் விலை குறைந்துள்ளதால் ரயான் துணி விற்பனை குறைந்துள்ளது. இதனால் மீட்டருக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு அவைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடோன்களும் மூடப்பட்டுள்ளன. இந்த உற்பத்தி நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News