தமிழ்நாடு

இனி எல்லை தாண்டினால் 3 ஆண்டு சிறை: நிபந்தனையுடன் தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை கோர்ட்

Published On 2023-07-05 08:57 GMT   |   Update On 2023-07-05 12:16 GMT
  • நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
  • விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், பல நேரங்களில் சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

மீன்பிடி தடைகாலம் முடிந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 22 மீனவர்கள் 4 விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஜூலை 5-ந்தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டுமென மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதற்கிடையே நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதானவர்கள் இனிமேல் எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது. அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 22 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News