தமிழ்நாடு

காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தாய்-மகன் உள்பட 3 பேர் பலி

Published On 2023-08-11 03:24 GMT   |   Update On 2023-08-11 05:49 GMT
  • சாலையில் நடந்து சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததால் அடுத்தடுத்து 3 பேர் பலியாகினர்.
  • கனமழை பெய்ததால் மின் கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சிக்குட்பட்ட ஒடச்சகரை கிராமத்தை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது55). இவரது மகன் பெருமாள் (33). இவருக்கு திருமணமாகி மோகனா என்கிற மனைவி உள்ளார். பெருமாளின் அத்தை சரோஜா (70).

இந்த நிலையில் நேற்று மாலை காரிமங்கலம் பகுதியில் கனமழை பெய்துள்ளது.

அப்போது மாதம்மாள் வீட்டின் முன்பு மின்கம்பத்தில் இருந்து கொய்யா மரத்திற்கு துணி காய வைக்க ஒரு கம்பி கட்டியுள்ளார்.

இன்று காலை அந்த கம்பியில் ஈர துணியை மாதம்மாள் காய போட்டுள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.

இதனை பார்த்த அருகில் இருந்த பெருமாள், சரோஜா ஆகியோர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டது. இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி காரிமங்கலம் போலீசாருக்கும், பண்ணந்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மின்சாரம் தாக்கி இறந்த மாதம்மாள், பெருமாள், சரோஜா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கியதில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News