நெல் வயலில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதை காணலாம்.
கிருஷ்ணகிரி அருகே தொடர் மழையால் ஏரிக்கரை உடைந்து 250 ஏக்கர் நெற்கதிர்கள் சேதம்
- கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக பெய்த மழையால், ஏரி படிப்படியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
- ஏரியின் கரைகள் உடைந்து, தண்ணீர் நெல்வயல்களில் புகுந்ததால், அறுவடைக்கு தயாராக நெல் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மோடிகுப்பம். இக்கிராமத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். நெல், ராகி, வாழை உள்ளிட்ட பயிர்கள் செய்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 'ராயல் ஏரி' அமைந்துள்ளது. இந்த ஏரியின் கீழ் 500 ஏக்கரில் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.
ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளுக்கு நீர் ஆதாரமாகவும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்கிறது. இவ்வாறான நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக பெய்த மழையால், ஏரி படிப்படியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இரவு, மோடிகுப்பம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், ஏரி நிரம்பியது.
இதனால் ஏரியின் கரைகள் உடைந்து, தண்ணீர் நெல்வயல்களில் புகுந்ததால், அறுவடைக்கு தயாராக நெல் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.
விவசாயிகளுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண்மை அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.