தமிழ்நாடு செய்திகள்
தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

Published On 2022-05-27 09:44 IST   |   Update On 2022-05-27 09:44:00 IST
காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முள்ளூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு:

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களையொட்டி தேயிலை தோட்டங்களும், வனப்பகுதிகளும் நிறைந்து காணப்படுகிறது. தற்போது இந்த பகுதிகளில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக வனத்தில் வசிக்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றி திரிந்து வருகின்றன.

மேலும் கிராமங்களையொட்டிய தேயிலை தோட்ட பகுதியில் முகாமிடுவதால் மக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் வெளியில் வரவே மக்கள் அச்சப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முள்ளூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே யானைகள் நடமாட்டம் இருப்பதால், குடியிருப்பு வாசிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News