தமிழ்நாடு
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருப்பூரில் தாய்- 2 மகன்கள் படுகொலை: வாலிபர் வெறிச்செயல்

Published On 2022-05-23 10:30 GMT   |   Update On 2022-05-23 10:30 GMT
திருப்பூரில் இன்று தாய் மற்றும் 2 மகன்களை படுகொலை செய்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்:

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 38). இவரது மகன்கள் தர்னீஷ் (9), நித்திஷ் (6). முத்துமாரி தனது 2 மகன்களுடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பூர் அருகே வாவிபாளையம் சேடர்பாளையம் அரசு பள்ளி வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.

இந்தநிலையில் இன்று காலை முத்துமாரி வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. மேலும் வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் வெளியே ஓடினார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனே வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது முத்துமாரி மற்றும் அவரது மகன்கள் தர்னீஷ், நித்திஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது முத்துமாரி மற்றும் அவரது மகன்களின் உடல்களில் கத்தியால் குத்தியதற்கான தடயங்கள் இருந்தது. இதனால் தப்பியோடிய வாலிபர்தான் 3பேரையும் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதையடுத்து 3பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் 3பேரையும் கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபர் யார்? எதற்காக கொலை செய்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரை பிடிக்க போலீசார் அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வாலிபர் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் பிடிபட்டால் 3பேர் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது.

இதனிடையே வாடகை வீடு உரிமையாளரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 15 நாட்களுக்கு முன்பு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் முத்துமாரி மற்றும் அவரது 2மகன்களை அழைத்து வந்ததுடன், பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் முன்பு இருந்த வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்கு போதியஇடவசதி இல்லாததால் இங்கு குடியேற வந்ததாக தெரிவித்துள்ளார். அதனை நம்பி வீட்டு உரிமையாளர் வாடகைக்கு வீட்டைகொடுத்துள்ளார்.

அதன்பிறகு அந்த நபர் முத்துமாரி வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்றுள்ளார். அவர்தான் 3பேரையும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் முத்துமாரியின் கணவரா? அல்லது கள்ளக்காதலனா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய், 2 மகன்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News