தமிழ்நாடு
வாகனத்தை ஓட்டிக் கொண்டு உரிமையாளருக்கு அனுப்பிய வீடியோ பதிவு.

“முடிந்தால் எங்களை பிடித்து பாருங்கள்”- வீடியோ காலில் முதலாளிக்கு சவால் விட்ட பீகார் வாலிபர்கள்

Published On 2022-05-18 07:31 GMT   |   Update On 2022-05-18 07:31 GMT
நிர்மல் வண்டி ஓட்ட மஞ்சித் வீடியோ எடுத்து நான் பீகாரை நோக்கி செல்கிறேன், எந்த போலீசாரும் எதுவும் செய்ய முடியாது. முடிந்தால் எங்களை பிடித்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் சுமார் 15 வருடங்களாக தனியார் குடிநீர் நிறுவனம் இயங்கி வருகிறது.

கம்பெனியில் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால் வேலைக்கு ஆட்கள் தேவை என கம்பெனி உரிமையாளர் விளம்பரம் செய்துள்ளார்.

இதனை அறிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சித் மற்றும் நிர்மல் எனும் 2 வாலிபர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி தங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறி உரிமையாளருக்கு போன் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உரிமையாளர் அவர்களை அழைத்து அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை தரவேண்டும் என்கிற நிபந்தனையுடன் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி தண்ணீர் கம்பெனியிலேயே அவர்கள் தங்க வசதி ஏற்படுத்தி உள்ளார்.

ஆனால் இதுவரை அடையாள அட்டை ஆதாரங்களையும் புகைப்படங்களையும் கொடுக்காமல் இழுத்தடித்து 2 பேரும் வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி காலை தண்ணீர் கம்பெனியில் இருந்த லோடு ஆட்டோ மற்றும் இதர வாகனங்களில் இருந்த டீசல் 50 லிட்டர், ரொக்கப் பணம் சுமார் 2 லட்சம் ரூபாய், 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் சாமான்கள் ஒரு சிலிண்டர், எல்இடி டிவி என அனைத்து பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர்.

வழக்கம் போல காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் கம்பெனியின் சாவி வெளியே வீசப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கம்பெனி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீசில் புகார் செய்தார்.

நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதலாளிக்கு நேற்று செல்போனில் வீடியோ பதிவு ஒன்று வந்தது.

அதில் நிர்மல் வண்டி ஓட்ட மஞ்சித் வீடியோ எடுத்து நான் பீகாரை நோக்கி செல்கிறேன், எந்த போலீசாரும் எதுவும் செய்ய முடியாது. முடிந்தால் எங்களை பிடித்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் செய்வதறியாமல் திகைத்து வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News