தமிழ்நாடு
கோப்புப்படம்

பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு

Published On 2022-05-16 09:54 GMT   |   Update On 2022-05-16 09:54 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 450 வீடுகள் கட்டுவதற்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அனுதி வழங்கப்பட்டது. இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
புதுக்கோட்டை:

இந்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி வழங்குகிறது.

இந்த திட்டம் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இதன்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இத்திட்டத்தை பிரதமர் வீடு வழங்கும் திட்டம் நகரம் என உள்ளது.

இதற்கு தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் மாநில முகமை நிறுவனமாக உள்ளது. கிராம ஊராட்சிகளில் மாநில ஊரக வளர்ச்சித்துறை அரசு முகமை நிறுவனமாக உள்ளது. இதனால் மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநரும் வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ), கிராம ஊராட்சி அளவில் ஊராட்சி செயலாளர் வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 450 வீடுகள் கட்டுவதற்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அனுதி வழங்கப்பட்டது. இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கலெக்டர் கவிதா ராமுவிற்கு 450 வீடு கட்டும் திட்டத்தில் முழுமையாக முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்தது. புகாரை தொடர்ந்து, கலெக்டர் நேரடி விசாரணை மேற்கொண்டதில் 450 வீடுகள் கட்டாமலேயே ரூ.7 கோடியை அதிகாரிகள் பயனாளிகளுக்கு கொடுத்து விட்டதாக முறைகேடு செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஆவுடையார் கோவில் முன்னாள் ஒன்றிய ஆணையர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உட்பட 25 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Tags:    

Similar News