தமிழ்நாடு செய்திகள்
அனல் தாக்கம் மேலும் அதிகரிக்கும்

கத்திரி வெயில் கதகதப்பு தொடங்கியது- அனல் தாக்கம் மேலும் அதிகரிக்கும்

Published On 2022-05-04 13:26 IST   |   Update On 2022-05-04 13:26:00 IST
கத்திரி கதகதப்பு தொடங்கியுள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை குழந்தைகள் முதியவர்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர்:

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே பல்வேறு நகரங்களில் வெயில் அதிகரித்தது. வேலூரில் படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக 108.1 டிகிரி வரை கொளுத்தியது.

தொடர்ந்து நேற்று 105.4 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருவண்ணாமலையில் 105.2 டிகிரி வாட்டியது.

கரூர், பரமத்தி, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருத்தணி, நாமக்கல், தஞ்சை ஆகிய நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரியும் வெயில் பதிவானது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி இன்று தொடங்கியது. 28ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதற்கு முன்னோட்டமாக இன்று காலையிலேயே வெயில் வாட்ட தொடங்கியுள்ளது. காலை 9 மணியளவிலேயே மதியம்போல் வெயில் சுட்டெரித்தது.

கத்திரி கதகதப்பு தொடங்கியுள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை குழந்தைகள் முதியவர்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும். 25 நாட்கள் தொடரும் வெயிலில் முடிந்த வரை வெளியில் செல்வதைத் தவிர்த்தால் உடலில் நீர் வற்றிப் போகும் அபாயத்தை தவிர்க்கலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதிகபட்சமாக வாணியம்பாடியில் 12.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. அக்னி வெயில் தொடங்கிய நேரத்தில் மழை பெய்ததால் அந்த பகுதிகளில் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவியது. ஏலகிரி மலையில் குளிர்ந்த காற்று வீசுகிறது.

அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தை குறைக்க சிவன் கோவில்களில் தாராபிஷேகம் நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தராபிஷேகம் தொடங்கியது.

வழிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் அருகே 6ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தென் கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அக்னி காலகட்டத்தில் பரவலாக மழை பெய்தால் ஓரளவு வெப்பம் தணியும் என்று எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

Similar News