தமிழ்நாடு
ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை படத்தில் காணலாம்.

ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

Published On 2022-04-22 08:15 GMT   |   Update On 2022-04-22 08:15 GMT
நகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பணியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு டிரைவர் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது28). இவர் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதுடன், குப்பைகளை சேகரிக்கும் வாகன டிரைவராகவும் பணியாற்றினார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வழக்கம்போல் பணிக்கு வந்த ரஞ்சித் மதியம் 2 மணி வரை வேலை செய்துவிட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு செல்வதற்கு மேற்பார்வையாளரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரஞ்சித் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊட்டி நகர மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 150 பேர் நேற்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர்.

பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு டிரைவர் ரஞ்சித் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், நகராட்சி வருவாய் அலுவலர் பிரான்சிஸ், நகர் நல அலுவலர் (பொறுப்பு) மகாராஜன், மேலாளர் மரிய லூயி ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையிலான பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர். 

Tags:    

Similar News