தமிழ்நாடு செய்திகள்
கீழ்அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதை படத்தில் காணலாம்

சென்னை மாநகர் குடிநீருக்காக வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கி வைப்பு

Published On 2022-04-04 10:05 IST   |   Update On 2022-04-04 10:05:00 IST
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை முடிந்துள்ளது.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை, மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை முடிந்துள்ளது.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் வீராணம் ஏரி நீர்மட்டம் வேகமாக குறைந்தது. நீர்மட்டம் குறைந்தால் சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும்.

எனவே வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கிவைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கீழ் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரிக்கு அதிகஅளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் தேக்கிவைக்கப்படுகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 43.35 அடியாக உள்ளது. ஏரிக்கு 449 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக 67 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.

Similar News