திராவிட இயக்க பாசறையில் இந்துத்துவா சக்திகள் ஊடுருவ முயற்சி- வைகோ பேச்சு
சூரம்பட்டி:
ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள புதுப்பிக்க பட்ட ம.தி.மு.க.அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாநகர மாவட்ட ம.தி.மு.க செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர்.கலைஞர் மற்றும் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் கட்டிக்காத்து வரும் திராவிட இயக்க பாசறையில் இந்துத்துவா சனாதன அமைப்புகள் ஊடுருவ முயற்சிக்கின்றன.
இந்த ஊடுருவலை தடுக்க இளைஞர்கள் அதிகம் வர வேண்டும். பெரியாரின் சிந்தனைகளை, அண்ணாவின் கொள்கைகளை, கலைஞரின் எழுத்துக்களை இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும். திராவிட பாசறைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் சனாதன சக்திகளை முறியடிக்க வேண்டும்.
திராவிட இயக்கத்தின் பாசறையாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கையுடன் இந்த இயக்கம் தொடர்ந்து செயல் படுகிறது. இதை தொடர்ந்து இளைஞர்கள் கட்டி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அலுவலக வளாகத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 85 திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார். இதில் ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஈரோடு சோலாரில் ரூ.60 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இப்போது அங்கு தற்காலிகமாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதேப்போல கனிராவுத்தர் குளத்தில் புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. ஈரோடு சி.என்.சி. கல்லூரியை 20 ஆண்டு காலமாக அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இப்போது தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கல்லூரியை புதுப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மற்றும் தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட செயலாளர் குழந்தைவேல் நன்றி கூறினார்.