தமிழ்நாடு
கோவை டியூசன் ஆசிரியர்

கைதான டியூசன் ஆசிரியரை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்- விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல்

Published On 2022-03-24 05:18 GMT   |   Update On 2022-03-24 05:18 GMT
சிறையில் உள்ள டியூசன் ஆசிரியர் மணிமாறனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சரவணம்பட்டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளில் தற்போது அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை:

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது40). இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி டியூசன் மற்றும் நடன வகுப்புகள் எடுத்து வந்தார்.

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நடனம் கற்க வந்தார். அப்போது மாணவியுடன் நட்பாக பழகினார். அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி தனது காதல் வலையில் வீழ்த்தி, மாணவியை அழைத்து கொண்டு திடீரென மாயமாகி விட்டார்

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசீந்திரம் சென்று தங்கிய மணிமாறன், அந்த வீட்டின் உரிமையாளர் மகளான கல்லூரி மாணவியையும் தனது காதல் வலையில் வீழ்த்தினார்.

பின்னர் மணிமாறன் 2 மாணவிகளிடமும் நாம் இங்கிருந்தால் வாழ முடியாது என கூறி அவர்களை அழைத்து கொண்டு திருப்பதி சென்று அங்கு வசித்தார். 2 மாணவிகளும் வீட்டில் இருந்து எடுத்து வந்த நகை மற்றும் பணத்தை வைத்து செலவு செய்தார். பின்னர் செலவுக்கு பணம் இல்லாத போது, மாணவிகளை கேனில் டீ நிரப்பி டீ விற்க அனுப்பினார். அதில் வந்த பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்து வந்தார்.

மணிமாறன் திருப்பதியில் இருப்பதாக வந்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து மாணவிகளை மீட்டனர். பின்னர் கோவை அழைத்து வந்து மணிமாறனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிறையில் உள்ள மணிமாறனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சரவணம்பட்டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளில் தற்போது அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

அப்போது மணிமாறன் இதுபோன்று வேறு ஏதாவது மாணவிகளை ஏமாற்றி தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளாரா? அவர்களிடம் இருந்து பணம் ஏதாவது பெற்றுள்ளரா? கடத்திய மாணவிகளை விபசார கும்பலில் தள்ளினாரா என்பது குறித்து விசாரிக்க உள்ளனர்.

மேலும் கோவை வருவதற்கு முன்பு நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக உள்ள புகார் குறித்து அவரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி எத்தனை பேரிடம் நகை, பணம் வாங்கி மோசடி செய்தார் என்பது குறித்தும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 
Tags:    

Similar News