தமிழ்நாடு செய்திகள்
கோப்புப்படம்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஐ.டி. பெண் ஊழியர் கற்பழிப்பு- காதலன் கைது

Published On 2022-02-15 13:35 IST   |   Update On 2022-02-15 13:35:00 IST
ஐ.டி.பெண் ஊழியருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தது தொடர்பாக அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி:

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நடன பள்ளியில் ஆசிரியராக இருந்த பிரபுவுக்கும் காதல் ஏற்பட்டது.

இந்தநிலையில் இளம்பெண், கும்மிடிப்பூண்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், காதலன் பிரபு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும், மேலும் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இளம்பெண் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு எனது தம்பி நடன பள்ளியில் சேர்ந்தார். அப்போது அந்த நடன பள்ளியில் ஆசிரியராக இருந்த பிரபு என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலமும் பழகி வந்தோம்.

பின்னர் இது காதலாக மாறியது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபு தனது வளர்ப்பு நாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று என்னிடம் கூறி மாதர்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு குளிர்பானம் மற்றும் பிஸ்கெட்டை எனக்கு கொடுத்தார்.

சிறிது நேரத்தில் நான் மயங்கினேன். பின்னர் எழுந்து பார்த்த போது எனது ஆடை கலைந்து இருந்தது. நான் கற்பழிக்கப்பட்டு இருந்ததை உணர்ந்தேன். இதுபற்றி பிரபுவிடம் கேட்ட போது நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று என்னை சமாதானப்படுத்தினார்.

ராயபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்ய ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று பிரபுவும், அவரது தாயும் கூறினார்கள். இதற்காக நான் கூகுள் பே மூலம் ரூ.80 ஆயிரம் அனுப்பினேன்.

ஆனால் நாங்கள் பதிவுத் திருமணம் செய்யவில்லை. அருகில் உள்ள கோவிலுக்கு சென்று மாலை மட்டும் மாற்றிக் கொண்டோம். இதற்கிடையே நான் கர்ப்பம் ஆனேன். இதுபற்றி காதலனிடம் கேட்ட போது 100 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் தர வேண்டும். அப்போதுதான் திருமணம் செய்து கொள்வேன். மேலும் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார்.

இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறி உள்ளார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரபு, இளம்பெண்ணை ஏமாற்றியது உறுதியானது. இதையடுத்து பிரபுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது தாயிடம் விசாரணை நடந்து வருகிறது.

பிரபுவின் செல்போனில் மேலும் பல பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதாக தெரிகிறது. மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Similar News