தமிழ்நாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா- முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

Published On 2022-01-19 07:54 GMT   |   Update On 2022-01-19 07:54 GMT
மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலகம் தற்காலிக கலெக்டர் அலுவலமாக மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு கனவாக இருந்த தனிமாவட்டம் கோரிக்கையை 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார்.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று மார்ச் மாதம் 2020-ம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டு, மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக லலிதா அதே ஆண்டு ஜூலை 15-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

பின்னர், 2020 டிசம்பர் 28-ம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு, மாவட்ட கலெக்டராக லலிதா நியமனம் செய்யப்பட்டார். மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலகம் தற்காலிக கலெக்டர் அலுவலமாக மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் இடத்தை கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக தருமை ஆதீனம் வழங்கினார்.

அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 19-ந்தேதி புதிய நிரந்தர கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா காணொலிகாட்சி மூலம் நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ராஜ்குமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ஒருங்கிணைந்த நாகை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை தாசில்தார் ராகவன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தி.மு.க பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News