தமிழ்நாடு
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.14 அடியாக குறைந்தது

Published On 2022-01-12 04:40 GMT   |   Update On 2022-01-12 04:40 GMT
கடந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 2 முறை 100 அடியை தொட்டது.
சத்தியமங்கலம்:

பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் பல்வேறு கூட்டு குடிநீர் திட்ட பணிகளும் பவானிசாகர் அணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 2 முறை 100 அடியை தொட்டது. அரக்கன்கோட்டை- தடப்பள்ளி பாசனம், கீழ்பவானி வாய்க்கால் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தாலும் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கியது. பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அதே நேரம் அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.14 அடியாக இருந்தது. அணைக்கு 892 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி கால்வாயில் 200 கனஅடியும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2300 கனஅடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து இதேஅளவில் இருந்தால் அணையின் நீர்மட்டம் இன்னும் 2 நாட்களில் 100 அடிக்கு கீழே சென்று விடும்.
Tags:    

Similar News