தமிழ்நாடு செய்திகள்
மீனவர்கள் விடுதலை

சிறை பிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை- இலங்கை கோர்ட்டு உத்தரவு

Published On 2022-01-05 13:09 IST   |   Update On 2022-01-05 13:09:00 IST
கச்சத்தீவு அருகே சிறை பிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம்:

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம், மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 68 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்.

சிறைபிடிக்கப்பப்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 20-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

10 நாட்களுக்கும் மேலாக அவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில், அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று 14 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரின் நீதிமன்ற காவலை இலங்கை ஊர்க்காவல் துறை கோர்ட்டு கடந்த 1-ந்தேதி நீட்டிப்பு செய்தது. அவர்களை வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் 19-ந்தேதி சிறை பிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் மண்டபம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News