தமிழ்நாடு செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்

பண்ணாரி சோதனை சாவடியில் போதை பொருட்கள் சிக்கியது- டிரைவர் கைது

Published On 2022-01-05 10:16 IST   |   Update On 2022-01-05 13:36:00 IST
பண்ணாரி சோதனை சாவடியில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் சிக்கியது. 2 வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பண்ணாரியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இன்று அதிகாலை சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மைசூர் பகுதியில் இருந்து 2 பிக்அப் வேன்கள் சத்தியமங்கலம் நோக்கி வந்தது. போலீசார் அந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பிக்அப் வாகனத்தின் டிரைவர் வாகனத்தை அப்படியே விட்டு தப்பி ஓடினார்.

தொடர்ந்து போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது 2 பிக்அப் வாகனங்களிலும் 65 மூட்டைகளில் போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.

போலீசார் பிடிபட்ட பிக்அப் வாகனத்தின் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்த செம்புலிங்கம் என்பதும், மைசூரில் 2 பிக்அப் வேன்களில் இருந்து 65 மூட்டைகளில் போதைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவைக்கு செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து வேன் டிரைவர் செம்புலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் 2 பிக்அப் வேன்கள், ஹான்ஸ், பான்பராக், மாணிக்சந்த், சுவாகத் போன்ற போதை பொருள்கள் கொண்ட 65 மூட்டைகளை கைப்பற்றி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் தப்பி ஓடிய பிக்அப் வேனின் டிரைவர் பெயர் குமாரா என்று தெரிய வந்தது. மேலும் இந்த போதை பொருட்கள் யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News