செய்திகள்
வெளிமாநிலத்தவர்கள் வருகையால் அதிகரிப்பு- வேலூரில் இன்று 31 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்திற்கு வெளிமாநிலத்தவர்கள் வருகையால் கொரோனா பாதிப்பு திடீரென இன்று 31-ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக முக்கிய இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதனால் கொரோனா தொற்று வெகுவாக குறைந்தது. வேலூர் மாவட்டத்திலும் தினந்தோறும் தொற்று ஒற்றை இலக்கில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24-ந்தேதி 20 பேருக்கும், 25-ந்தேதி 17 பேருக்கும், 26-ந் தேதி 11 பேருக்கும், நேற்று 17 பேருக்கும் என இருந்தது. ஆனால் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில்தான் இருந்து வருகிறது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அதிகளவில் சிகிச்சைக்காக ரெயிலில் வருகின்றனர்.
ரெயில் பயணம் செய்யும் அவர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கும்பல் கும்பலாக வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும்போது தொற்று உறுதியாகிறது.
இன்று மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கையில் 15 பேர் வெளிமாநிலத்தவர்கள் தான். அவர்களுடன் தொடர்புடைய அவரது உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனாவை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முககவசம் அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும்’ என்றனர்.