செய்திகள்
கோப்புப்படம்

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

Published On 2021-11-13 10:06 GMT   |   Update On 2021-11-13 10:06 GMT
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:

மதுரை அண்ணாநகர் செண்பக தோட்டம் பகுதியைச் சேர்ந்தவன் குருவி விஜய் (வயது 27), பிரபல ரவுடியான இவன் மீது வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால் போலீசார் அவனை தேடி வந்தனர். இதையறிந்த குருவி விஜய் கடலூர், தென்காசி மாவட்டங்களுக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தினான். அங்கும் அவன் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தான். இதனால் அவன் மீது அங்குள்ள போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவாயின.

இந்த நிலையில் நேற்று இரவு குருவி விஜய் மதுரை வந்தான். பின்னர் அவன் தனது நண்பரான வண்டியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த கார்த்தி என்ற மவுலி (28) என்பவருடன் சேர்ந்து செண்பக தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பூங்கா அருகே அமர்ந்து மது குடித்துக் கொணடிருந்தான்.

அப்போது அண்ணாநகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த 24 வயது பெண் தனது மாமாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு மொபட்டில் வீட்டிற்கு திரும்ப முயன்றார்.

அவர் மொபட்டில் வருவதை பார்த்ததும் குருவி விஜய்யும், கார்த்தியும் அந்த பெண்ணை வழிமறித்தனர். இதனால் பயந்து போன அந்த பெண் மொபட்டை நிறுத்தினார். உடனே 2 பேரும் அவரை தங்களுடன் வருமாறும், இல்லையென்றால் கத்தியால் குத்திக்கொன்று விடுவதாகவும் மிரட்டினார்கள். பின்னர் இருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர்.

இதனால் பயத்தில் அந்த பெண் அலறினார். சத்தம் கேட்டு அருகில் வீட்டில் இருந்த அவரது மாமா அங்கு ஓடிவந்து காப்பாற்ற முயன்றார். உடனே 2 ரவுடிகளும் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைக்குலைந்த அவர் கீழே விழுந்தார். உடனே அவர் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

ஆனால் போதையில் இருந்த குருவி விஜய்யும், கார்த்தியும் அந்த பெண்ணை தரதரவென் இழுத்துச் சென்று பூங்கா அருகில் நின்று கொண்டிருந்த வேனுக்குள் தள்ளினார்கள். பின்னர் 2 பேரும் மாறி மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்த அண்ணா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரவுடிகளை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீது கற்களை எடுத்து சரமாரியாக வீசிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இந்த கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் நெஞ்சில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டார். இதில் ரவுடி குருவி விஜய் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அலறி அடித்து ஓடி அவன் கீழே விழுந்தான். உடனே போலீசார் அவனை மடக்கிப்பிடித்தனர்.

அவனது கூட்டாளி கார்த்தி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தான். அப்போது அவன் கீழே தவறி விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவனையும் சுற்றி வளைத்து பிடித்தனர். 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதான கார்த்தி மீதும் போலீசில் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

குண்டு காயம் ஏற்பட்ட ரவுடி குருவி விஜய் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News