செய்திகள்
கடலூர் அருகே காராமணிக்குப்பம் புது தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்

கடலூர் மாவட்டத்தில் கனமழை- 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் வெள்ளத்தில் மூழ்கியது

Published On 2021-11-03 11:09 IST   |   Update On 2021-11-03 11:09:00 IST
கடலூர் மாவட்டத்தில் உள்ள 24 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் மீதமுள்ள 204 ஏரிகளும் விரைந்து நிரம்பி வருகின்றன.
கடலூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1136 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் 5000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி அழுகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1000 மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் கடலூர் மாநகராட்சி சார்பில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 24 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் மீதமுள்ள 204 ஏரிகளும் விரைந்து நிரம்பி வருகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை கண்காணித்து வருகின்றனர்.



Tags:    

Similar News