செய்திகள்
வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

நீர்வரத்து அதிகரிப்பு- வீராணம் ஏரி இன்று நிரம்பியது

Published On 2021-08-24 10:19 IST   |   Update On 2021-08-24 10:19:00 IST
வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரியில் இருந்து விவசாயத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காட்டுமன்னார் கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கீழ்அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,506 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.

இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து 1,652 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் நேற்று 46.80 அடியாக இருந்தது. இன்று காலை ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி வீராணம் ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு நேற்று 48 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 52 கன அடிநீர் சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரியில் இருந்து விவசாயத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீராணம் ஏரி நிரம்பியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Similar News