செய்திகள்
ஆரணி நகரில் காரணமின்றி வாகனங்களில் சுற்றித்திரிவர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்த காட்சி.

ஆரணி நகரில் காரணமின்றி சுற்றியவர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்

Published On 2021-05-21 08:20 IST   |   Update On 2021-05-21 08:20:00 IST
ஆரணியில் காரணமின்றி சாலைகளில் சுற்றியவர்களை போலீசார் தோப்புக்கரணம் போடவைத்து, உறுதிமொழியும் ஏற்க வைத்தனர்.
ஆரணி :

கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அத்தியாவசிய தேவையான மளிகை மற்றும் காய்கறி கடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆரணி நகரில் காலை 10 மணிக்கு பிறகும் சாலைகளில் எப்போதும் போல இரு சக்கர வாகனங்களிலும், கார், வேன்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.

இ-பதிவு இல்லாமல் வாகனங்கள் செல்வதை துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுரேஷ்பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், ரகு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேலு, தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் குமரவேலு, மணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், சிவகுமார், உள்ளிட்ட அலுவலர்கள் கண்காணித்து இ- பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

நேற்று கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த எலக்ட்ரிக் கடைகள், பிரின்டிங் பிரஸ் உள்ளிட்ட 15 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும் பழைய பஸ் நிலையம் அருகே காரணமின்றி வாகனங்களில் சுற்றி வந்த இளைஞர்களை போலீசார் நிறுத்தி அவர்களை தோப்புக்கரணம் போட வைத்து, உறுதிமொழியும் எடுக்க செய்தனர்.

Similar News