செய்திகள்
கொரோனா தொற்றுக்கு பலியான தம்பதியர் ராதாகிருஷ்ணன் அய்யர்-சுந்தரி.

ஆரணி அருகே கொரோனா தொற்றால் கணவன்-மனைவி பலி

Published On 2021-05-10 17:43 GMT   |   Update On 2021-05-10 17:43 GMT
ஆரணி அருகே கொரோனா தொற்றால் கணவன்-மனைவி பலியாகினர். இதனால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
ஆரணி:

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் வேகமாகப் பரவி வருகிறது. ஆரணியை அடுத்த பனையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் அய்யர் (வயது 75) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலப் பாதிப்பால் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் அய்யர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை மகள்கள் மற்றும் மருமகன்கள் ஆகியோர் சுகாதாரத் துறையினர் மூலமாக சென்னையிலேயே தகனம் செய்தனர்.

இந்தநிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் பலியான ராதாகிருஷ்ணன் அய்யரின் மனைவி சுந்தரிக்கும் (65) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரும், சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கணவர் உயிரிழந்த தகவலை குடும்பத்தினர் சுந்தரியிடம் தெரிவிக்காமல் இருந்தனர்.

எனினும், கணவர் பலியான தகவல் தெரியாமலேயே சுந்தரியும் கணவர் உயிரிழந்த 2 நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்தார். அவரின் உடல் சென்னையிலேயே தகனம் செய்யப்பட்டது. இருவரின் உடல்கள் சொந்த கிராமத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. இதனால் கிராம மக்களும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.
Tags:    

Similar News