செய்திகள்
உத்திரமேரூரை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை- டி.டி.வி. தினகரன் பேச்சு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமாரை ஆதரித்து வாலாஜாபாத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 அறிவித்துள்ளது. தற்போது தமிழக அரசு முதியோர் உதவி தொகையை கொடுக்க முடியாமல் ரூ.7 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருகிறது. இவர்கள் எப்படி இது போன்ற திட்டங்களை கொடுக்க முடியும்.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
உத்திரமேரூரை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கல் குவாரிகள் இயங்கும் பகுதிகளில் தரமான சாலைகள் மற்றும் வாகன விபத்தை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
செய்யாறு, பாலாறு ஆகிய ஆறுகள் இணையும் ஆற்றுப்பகுதியில் குறுக்கே, தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் இருந்து சாலவாக்கம் தனி ஒன்றியமாக பிரிப்பதற்கு முழுமூச்சில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் என்.மனோகரன், அ.ம.மு.க. நிர்வாகிகள் தம்மனூர் இ.தாஸ், ஆலஞ்சேரி கமலக்கண்ணன், வேளியூர் எம்.தனசேகரன், மணிமாறன், கூரம் பச்சையப்பன் மாவட்ட மகளிரணி செயலாளர் வரலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.