செய்திகள்
கொள்ளை நடந்த அழகியமனவாள பெருமாள் கோவில்.

பெண்ணாடம் அருகே கோவிலில் ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை கொள்ளை

Published On 2021-02-05 15:35 IST   |   Update On 2021-02-05 15:35:00 IST
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கோவிலில் ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே இறையூர் பகுதியில் திட்டக்குடி-விருத்தாசலம் மெயின் ரோட்டின் அருகே பிரசித்திபெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகியமனவாள பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் 3 அடி உயரமுள்ள பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஐம்பொன் சிலைகளும், 2½ அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது.

இந்த கோவிலுக்கு கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

நேற்று இரவு வழக்கம்போல் கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் தர்மகர்த்தா பாலசுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் சிலர் நள்ளிரவில் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோவிலின் சுற்றுசுவர் மீது ஏறி கோவிலுக்குள் குதித்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் இருந்த முன்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர்.

கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலையை திருடினர். பின்னர் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கநகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இன்று அதிகாலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக கோவில் தர்மகர்த்தா பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோவிலுக்கு விரைந்து வந்து பார்த்தார்.

அப்போது கோவிலில் இருந்த ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மற்றும் தங்க, வெள்ளி நகைகள் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் விருத்தாசலம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன்சிலை மற்றும் தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திட்டக்குடி- விருத்தாசலம் மெயின்ரோட்டின் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அழகியமனவாள பெருமாள் கோவிலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News