செய்திகள்
பலத்த மழையால் சாலையின் நடுவே விழுந்த கற்கள், பாறை

பலத்த மழை: மஞ்சூர்- கிண்ணக்கொரை சாலையின் நடுவே விழுந்த கற்கள், பாறைகள் போக்குவரத்து பாதிப்பு

Published On 2021-01-15 12:19 IST   |   Update On 2021-01-15 12:19:00 IST
மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று இரவு பெய்த பலத்த மழைக்கு கிண்ணக்கொரை முனீஸ்வரர் கோவில் சாலைகளில் பெரிய, பெரிய பாறைகளும் மண் திட்டுக்களும் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான அருவங்காடு, ஒட்டுபட்டரை, கொலக்கம்பை உள்பட அனைத்து பகுதிகளிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்து, குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

நேற்று காலை முதல் மீண்டும் குன்னூர், சுற்றுப்புறப பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையால் குன்னூர்- ஊட்டி சாலை, கோத்தகிரி- குன்னூர் சாலை, கொலக்கம்பை சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

உழவர் சந்தை, ரேலி காம்பவுண்ட், மாடல் அவுஸ், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கால்வாய்கள் தூர் வாரப்படததால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர்.

குன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் மேரக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காய்கறி தோட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதுடன், காய்கறிகள் செடியிலேயே அழுகும் நிலையும் உருவாகி உள்ளது.

மழையும், குளிரும் மாற்றி, மாற்றி வாட்டி வதைப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், விவசாயிகள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதுதவிர நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் விற்பனைக்காக கரும்பு, மஞ்சள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் வியாபாரத்திற்கு வாங்கு குவித்திருந்தனர். ஆனால் மழை காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது வியாபாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியது.

மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று இரவு பெய்த பலத்த மழைக்கு கிண்ணக்கொரை முனீஸ்வரர் கோவில் சாலைகளில் பெரிய, பெரிய பாறைகளும் மண் திட்டுக்களும் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி. எந்திரத்துடன் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த கற்களையும், பாறைகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

ஊட்டி, உலிக்கல், கோத்தகிரி, குந்தா, அவலாஞ்சி, மேல்குன்னூர், கேத்தி, கோடநாடு, கிளன்மார்கன், கீழ்கோத்தகிரி, எடப்பள்ளி, கெத்தை, கல்லட்டி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. தொடர் மழையால் அமராவதி அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல் தாராபுரம், மூலனூர், மடத்துக்குளம், குண்டடம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Similar News