செய்திகள்
கோழிப்பண்ணை

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 1000 கோழிப்பண்ணைகளில் திடீர் ஆய்வு

Published On 2021-01-07 08:51 GMT   |   Update On 2021-01-07 08:51 GMT
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்னைகளில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தென்காசி:

கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய கேரள எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையில் தென்காசி மாவட்ட எல்லையான புளியறை சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர் மற்றும் கிருமிநாசினி தெளிப்பவர் ஆகியோர் அடங்கிய குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழித் தீவனங்கள், கோழி இறைச்சிகள் மற்றும் கோழிக்கழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக திருப்பி அனுப்பப்படுகிறது. மற்ற வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்னர் நீண்ட சோதனைகளுக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இன்று 2-வது நாளாக சுகாதார துறையினர் மற்றும் கால்நடை மருத்துவதுறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை கால்நடைதுறையினர் தீவிரபடுத்தி உள்ளனர். மண்டல இணை இயக்குநர் முகமது காலித் தலைமையில் வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நோய் மனிதர்களையும் தாக்கும் என்பதால் அது குறித்து சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்னைகளில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது நோய் பாதித்த கோழிகள் குறித்து கால்நடை துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கால்நடைதுறை அதிகாரிகள் கூறும்போது, பறவைக்காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பறவை காய்ச்சல் கண்ட கோழிகளுக்கு மூக்கில் நீர் ஒழுகும், மேலும் நோய் கண்ட கோழிகள் கூட்டம் கூட்டமாக இறந்து போகும். அவ்வாறு காணப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் கோழி இறைச்சி, முட்டைகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். பாதி வேக வைத்த நிலையிலும், பச்சை முட்டை, ஆப்பாயில் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கோழிகளை வீட்டுக்குள்ளேயே பாதுகாக்க வேண்டும். வெளியில் விடக்கூடாது. அவற்றிற்கு வைக்கும் தீவனம், தண்ணீரை சுத்தமாக கொடுக்க வேண்டும் என்றனர்.

புளியறை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்புப் பணிகளை தென்காசி கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் 223 பதிவு செய்யப்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளது. இந்த கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பண்ணைகளில் கோழிகளுக்கு ஏற்படும் அசாதாரண இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வனத்துறையின் மூலம் பறவைகள் கூடும் நீர்நிலையங்கள், பறவைகள் சரணலாயங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், அங்கு வரும் பறவைகளுக்கு நோய் அறிகுறிதென்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News