செய்திகள்
டாஸ்மாக் கடை

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை

Published On 2021-01-04 04:08 GMT   |   Update On 2021-01-04 13:31 GMT
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அபராதம் விதிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்:

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பரவலாக புகார் கூறப்படுகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வாங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி புகார் கூறப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படும் நடைமுறை தொடரும் நிலை உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கேட்டபோது டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாவது:-

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தால் சரக்கு, சேவை வரி உள்பட ரூ.10,900 அபராதமாக விதிக்கப்படும்.

அந்த அபராதத்தை சம்பந்தப்பட்ட விற்பனை மையத்தின் மேலாளர், டாஸ்மாக் கணக்கில் செலுத்தி விடுவார். மேலும் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் கண்காணிப்பு குழுக்களை அமைத்து உள்ளது.

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் மைய விற்பனை மையங்களிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் பிடிபட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News