செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35½ லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2020-12-05 02:33 GMT   |   Update On 2020-12-05 02:33 GMT
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த சென்னையை சேர்ந்த சையத் அபுதாகீர் (வயது 37), ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் காதர் (54) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 706 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News