செய்திகள்
மழை

புயல் சின்னம் எதிரொலி- கடலூரில் பலத்த மழை

Published On 2020-11-24 08:17 GMT   |   Update On 2020-11-24 08:17 GMT
நிவர் புயல் காரணமாக கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்கிறது.
கடலூர்:

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து தீவிரபுயலாக மாறி நாளை (புதன்கிழமை) மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் 3 நாட்கள் வரை கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 7 மணியளவில் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசாக மழை தூற தொடங்கியது.

அதன்பின்னர் சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

இதனால் காலை நேரத்தில் சாலைகள் இருள் சூழ்ந்து காணப்பட்டது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.

இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும்பாலானோர் மழையில் நனைந்த படியும், குடைபிடித்த படியும் சாலையில் செல்வதை காண முடிந்தது.
Tags:    

Similar News