செய்திகள்
திருமணமான 2 மாதத்தில் பெண் அதிகாரி தற்கொலை: கணவர்-மாமியார் கைது
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே திருமணமான 2 மாதத்தில் பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்னதானங்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சுசிதா கிருபாலினி (வயது 25). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைப்பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், கடலூரை அடுத்த எம்.புதூரை சேர்ந்த சிவநாதன் மகன் சந்தோஷ்குமார்(28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் ஒரு கார், 45½ பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை சந்தோஷ்குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் சந்தோஷ்குமார், அவரது தாய் இந்திரா(50) மற்றும் குடும்பத்தினர் சுசிதா கிருபாலினியிடம், பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர், ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு சுசிதா கிருபாலினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு சந்தோஷ்குமாரின் வீட்டுக்கு வந்து, அங்கு இறந்து கிடந்த சுசிதா கிருபாலினியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுசிதா கிருபாலினியின் தற்கொலைக்கு காரணமான சந்தோஷ்குமார், இந்திரா ஆகியோரை கைது செய்தனர்.