செய்திகள்
டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை- கலெக்டர் தலைமையில் நடந்தது
வடகிழக்கு பருவமழை மற்றும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
வடகிழக்கு பருவமழை மற்றும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் மழைக்கால நோய் தடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க உள்ளாட்சித்துறை, நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்கள் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி மலேரியா இல்லாத புதுவையை உருவாக்க உள்ளாட்சித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏரிகள், குளங்கள், பெரிய கழிவுநீர் வாய்க்கால்களை பொதுப்பணித் துறை மூலம் தூர்வாரி பருவமழை காலத்தில் மழைநீர் தேங்காமல் கொசு உற்பத்தியாவதை தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொசு உற்பத்தியாகும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டத்தில் உள்ளாட்சி, பொதுப்பணி, செய்தி மற்றும் விளம்பரம், காவல், புதுவை நகர மன்ற குழுமம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.