செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

Published On 2020-10-27 04:54 GMT   |   Update On 2020-10-27 04:54 GMT
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 200 கனஅடி வீதம் திறந்துவிடப்படுகிறது.
செங்குன்றம்:

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மாதம் 21-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் வினாடிக்கு 1,000 கன அடியாக இருந்த தண்ணீர் திறப்பு தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த 10-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 140 கனஅடி வீதம் திறக்கப்பட்டடு, தற்போது 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து இன்னும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 200 கனஅடி வீதம் திறந்துவிடப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று நீர்மட்டம் 29 அடியாக பதிவானது. 1,518 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு 15 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
Tags:    

Similar News