செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-10-16 08:01 IST   |   Update On 2020-10-16 08:01:00 IST
ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள சாவக்கட்டுபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்துக்கான ஒப்புதலை பெற கவர்னரிடம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். ஆசிரியர்கள் இடமாறுதல் குறித்து மதுரை மற்றும் சென்னை ஐகோர்ட்டுகள் தீர்ப்புகளை வழங்கி உள்ளன. இந்த தீர்ப்புகளை ஒருங்கிணைத்து பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும். சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே தீர்ப்புக்கு பிறகே பணி நியமன ஆணை வழங்கப்படும். 2-ம் பருவத்துக்கான புத்தகங்கள் தேவையான அளவு உள்ளது. தற்போது கூடுதலாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிக்கூடம் திறப்பது குறித்து ஆராய தனிக்குழு அமைக்கப்படவில்லை. பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து ஆய்வு செய்யவே குழு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த குழுவின் பரிந்துரைப்படி மாணவர்கள் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Similar News