செய்திகள்
தற்கொலை

குடியாத்தத்தில் மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-13 08:31 GMT   |   Update On 2020-10-13 08:31 GMT
குடியாத்தத்தில் மனைவி இறந்த துக்கத்தில், தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம், செதுக்கரை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 60), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா (55). இவர்களுக்கு மோகன் (38) என்ற மகன் உள்ளார். இவர் திருமணமாகி எம்.வி.குப்பம் கிராமத்தில் வசித்து வருகிறார். சம்பத் தனது மனைவியுடன் கடந்தசில ஆண்டுகளாக குடியாத்தம் கள்ளூர் காந்திநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சுலோச்சனாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே படுத்தப்படுக்கையாக இருந்துள்ளார். சம்பத் மட்டும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையிலிருந்து சம்பத் வீட்டில் விளக்கு எரியாமல் இருந்துள்ளது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இரவு 10 மணி ஆகியும் இருட்டாக இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்துபார்த்தபோது அங்கு சுலோச்சனா தரையில் பிணமாக கிடந்தார். சம்பத் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக எம்.வி.குப்பத்தில் உள்ள அவரது மகன் மோகனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் இதுபற்றி குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்ததும் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சுலோச்சனா மற்றும் சம்பத்தின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில் சம்பத்தும் அவர் மனைவி சுலோச்சனாவும் கடந்த 7 ஆண்டுகளாக கள்ளூர் காந்தி நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேறு எந்த ஆதரவும் இல்லாமல் இருந்துள்ளனர். சுலோச்சனா புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதத்தாலும் படுத்த படுக்கையாகி விட்டார். அதனால் சம்பத் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாகவே சுலோச்சனா இறந்துள்ளார். இதனால் தனக்கு ஆதரவு யாரும் இல்லாததால் இது குறித்து யாருக்கும் தகவல் சொல்லாமல் சம்பத் இருந்துள்ளார். தனது மனைவி இறந்த பிறகு தனக்கு ஆதரவு யாருமில்லையே என்று நினைத்த சம்பத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News